TikTok தடைக்குப் பிறகு இன்ஸ்டா பொழுதுபோக்கு என்பது வாழ்க்கையே ஆகி விட்டது.
TikTok தடை செய்யப்பட்டதற்குப் பிறகு பலரின் வாழ்க்கையை அழிக்கும் பொறுப்பை இன்ஸ்டா எடுத்துக்கொண்டது.
இளையோர்கள் லைக்ஸ், பிரபலத்துக்கு அடிமைப்பட்டு நேரத்தையும், நற்பண்புகளையும் இழந்து வருகின்றனர்.
உண்மை சம்பவங்கள், குடும்ப சிக்கல்கள், மற்றும் Instagram உண்மையான விளைவுகள் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது.
இன்ஸ்டா
முன்பு நிழற்படங்களைப் பகிரும் தளமாக இருந்த போது பெண்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது, தற்போதும் தொடர்கிறது.
குறு காணொளிகளை இன்ஸ்டா அறிமுகப்படுத்திய பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது, தற்போது ரீல்ஸ் வந்த பிறகு கட்டுப்பாடு இல்லாமல் சென்று விட்டது.
தற்போது பணமும் கிடைப்பதால், பலரும் பணத்துக்காகவும், பிரபலத்துக்காகவும் Extereme ஆக செயல்பட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு குறைந்த ஆதரவே!
X ல் ஆண்கள் ஆதிக்கம் அதிகம் ஆனால், இன்ஸ்டாவில் பெண்கள் ஆதிக்கமே அதிகம்.
காரணம், X எழுத்து ஆனால், இங்கே பார்வை. எனவே, இயல்பாகவே பெண்களே முன்னணியில் உள்ளனர்.
எளிதாகப் புரிந்து கொள்ள, பெண்களைக் கவரும் எதுவும் இங்கே ஹிட் அடிக்கும். திரைப்படத்தின் பாடல்கள் உட்பட.
லைக்ஸ்
லைக்ஸே ஒரு நபரின் பிரபலத்தைத் தீர்மானிப்பதால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டனர்.
தற்போது கூடுதலாகப் பணமும் கிடைக்கிறது.
சில காணொளிகளைக் காண்கையில் இவர்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், பக்கத்துக்கு வீட்டினர் இவற்றைப் பார்க்க மாட்டார்களா?!
அது பற்றி எந்தக் கவலையும், எண்ணமும் இல்லாமல் எப்படி கேவலமாக நடந்து கொள்ள முடிகிறது? என்ற எண்ணம் வந்து செல்லத் தவறுவதில்லை.
அடுத்தவருக்காக இல்லையென்றாலும், நமக்கே இது தவறு என்று தோன்ற வேண்டும் இல்லையா!
நேரத்தைக் கபளீகரம் செய்கிறது
ஒருவரின் நேரத்தை விரைவாகக் கபளீகரம் செய்து விடுகிறது.
மாணவர்களின் படிப்புத்திறன் இதனாலேயே கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் ரீல்ஸ் செய்துகொண்டுள்ளார்கள்.
ஆகக்கொடுமையாகக் குடும்பமே இதில் ஈடுபடுகிறது.
பணியில், கல்வியில், வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், இப்பக்கமே செல்லக் கூடாது என்பதே உண்மை.
சமூக கௌரவம்
சில விஷயங்களைக் கேள்விப்பட்டதில், இப்படியுமா?! இருப்பார்கள் என்று வியப்பை அளிக்கிறது.
இன்ஸ்டாவில் வெளியிடுவதற்காகவே பயணம் செல்கிறார்கள்.
மற்றவர்களிடம் பந்தா காட்டுவதற்காகவே செலவு செய்து பொருட்களை வாங்குகிறார்கள்.
தனிப்பட்ட அனைத்தையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறார்கள்.
சம்பவம் 1
தேனிலவுக்கு வெளிநாடு அழைத்துச் செல்வதாக கூறிய கணவன் திருமணத்துக்குப் பிறகு முடியாததால், விவாகரத்து வரை பெண் சென்று விட்டார்.
காரணம், அங்கே சென்று எடுக்கும் படங்களை இன்ஸ்டாவில் வெளியிடத் திட்டமிட்டு இருந்தார். இந்திய சுற்றுலாத் தலத்துக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர் வெளிநாடு அழைத்துச் செல்வதாகக் கூறியும் சமாதானமாகவில்லை.
இதற்கெல்லாமா விவாகரத்து?! இது பெங்களூரூவில் நடந்த நிகழ்வு.
சம்பவம் 2
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் தன் மனைவியின் இன்ஸ்டா பக்கத்தைக் காண்பித்து எப்படியுள்ளது? என்று கேட்டுள்ளார்.
அவரது மனைவி அலங்காரம் செய்து கொண்டு பாடலுக்கு ஆடுவது போன்றவற்றைச் செய்துள்ளார். தோராயமாக 15,000 பார்வைகள்.
‘இன்ஸ்டாவில் இது போலப் பகிர்ந்தால் பணம் கிடைக்கிறதாம், அதனால் என் மனைவி செய்கிறார். எனக்கும் ஒப்புதல்‘ என்று கூறியுள்ளார்.
நடிகைகள் இது போல போடும் போது, நடிக்கையில் என் மனைவி செய்தால் என்ன தவறு? என்று கேட்டுள்ளார்.
இதெல்லாம் ஒரு போதை, நாளை இதில் கருத்திடும் நபருடன் பழக்கம் ஏற்பட்டு இவர் குடும்பத்திலேயே பிரச்சனை வரலாம் ஆனால், அதன் ஆபத்தை உணராமல் உள்ளார்.
பெங்களூரூவில் நடந்த இந்நிகழ்வை X ல் ஒரு பெண் பகிர்ந்து இருந்தார்.
சம்பவம் 3
திருமணத்துக்கு முன்னர் பல Gift, Outing, Celebration செலவுகளைச் செய்ய வைத்து, அதைக் காணொளியாக இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
இதனால் ஏற்படும் செலவுகள், நட்டங்களை உணரவே இல்லை.
அடுத்தவர்களிடம், ‘நான் எப்படியுள்ளேன்.. பாருங்கள்!‘ என்று தற்பெருமை பேசவே அனைத்தையும் செய்து வருகிறார்.
இவரைப் போலக் கணக்கிலடங்கா நபர்கள் செய்து வருகின்றனர். இது தான் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது.
சம்பவம் 4
யாராக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பார்வைகள் குறையும் அல்லது மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாக செய்யலாம்.
இன்ஸ்டாவில் குப்பை போல பலர் உள்ளதால், ஒருவர் சற்று சலிப்பாகினால் அடுத்தவருக்கு நகர்ந்து விடுவர்.
இந்நிலையில் ஒருவர் மீதான வயது காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஈர்ப்பு, பார்வை, லைக்ஸ் குறைகையில் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
பின்தொடர்பவர்களைத் தக்க வைக்க ஆபாசமாக வெளியிடுவது. அதைக் கணவனே எடுத்து வெளியிடுவது என்று படுகேவலமாகச் சென்று கொண்டுள்ளார்கள்.
வாழ்க்கையை அழிக்கும்
தற்பெருமை, மற்றவர்கள் முன்னர் தன்னை உயர்த்திக்காட்ட, ஆபாசம், பணம் என்று மிக மோசமாக சென்று கொண்டுள்ளது.
இதனால், பலரின் குடும்ப வாழ்க்கையும் சிக்கலில் முடிகிறது. இன்ஸ்டாவில் பலர் போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளனர்.
சுருக்கமாக, தனக்காக வாழாமல் மற்றவர்களின் பார்வையில் தன்னை கெத்தாகக் காட்டத் தன்னை சிதைத்துக்கொண்டுள்ளார்கள்.
முன்னரே கூறியபடி இதுவொரு போதை. இதில் சிக்கி விட்டால், வெளியே வருவது மிக மிகக்கடினம். பலர் புலி வாலை பிடித்த கதையாக உள்ளனர்.
பிரபலங்களின் வாழ்க்கை
திருமணத்துக்கு முன்னர் இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்தாலே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை ஓரளவு ஊகித்து விடலாம்.
பெரும்பான்மை பிரபலங்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்துப்பாருங்கள், ஏதோ ஒரு சிக்கலில் இருப்பர்.
பலர் கைதாவார்கள், சில விவாகரத்தாவார்கள், சில வழக்குகளில் சிக்குவார்கள்.
இதற்கு ஏராளமானவர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம், உங்களுக்கும் தெரியும்.
எனவே, வெளியே இருந்து பார்க்கையில் பணம், சொகுசு என்று அழகாக தெரியும் குடும்பத்தில் புயல் வீசுவது பலருக்குத் தெரியாது.
வாழ்க்கையில் முன்னேற
இது AI காலம். நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே புரியவில்லை.
எனவே, நம்மை மேம்படுத்துவது அவசியமாகிறது.
இளையோர் குறிப்பாக 20 – 40 தங்களது பொன்னான நேரத்தை இதில் செலவழித்து வந்தால், விரயம் செய்த நேரத்தை நினைத்துப் பின்னர் வருத்தப்பட நேரிடும்.
பொழுதுபோக்கு நல்லது ஆனால், அவை நம் கட்டுக்குள் இருக்கும் வரையே!
மற்றவர்களைத் திருப்தி செய்ய முயலாதீர்கள்
வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடத்தை அடைந்து விட்டீர்கள், பொருளாதாரத்தில் பாதுகாப்பான பகுதியை அடைந்து விட்டீர்கள் என்றால், அளவாக நேரம் செலவழிப்பது பிரச்சனையில்லை.
ஆனால், வாழ்க்கையில் இன்னும் எதுவுமே சாதிக்கவில்லை, குறைந்த பட்சம் சரியான தொழில், பணியில் இல்லையென்றால், இவற்றை விட்டு விலகி இருங்கள்.
உங்கள் விருப்பத்துக்குச் செய்வது வேறு ஆனால், எப்போது மற்றவர்களைக் கவர்வதற்காகச் செயல்பட ஆரம்பித்து விட்டீர்களோ அன்றே தனித்தன்மையை இழந்து விட்டீர்கள்.
Braking Point
எல்லோருக்கும் ஒரு சுதாரிக்கும் Breaking Point இருக்கும். ஒருவேளை அது இதுவாகவும் இருக்கலாம் அல்லது பின்னர் ஒரு தருணத்தில் உணரலாம்.
எனவே, தருணங்களைத் தவறவிட்டு வருத்தப்படாதீர்கள்.
இன்ஸ்டா பிரபலம், பணம், லைக்ஸ் அனைத்துமே தாற்காலிகமே! நிரந்தரம் அல்ல.
தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல குடும்ப உறவையும் சிதைக்கிறது.
ஒரு நாள் புறக்கணிப்பு நடைபெறுகையில் அதைத் தாங்கும் சக்தி, இது போன்று பயன்படுத்துபவர்களுக்கு இருக்காது.
thanks to giriblog
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)